சி.ஐ.ஐ அமைப்பின் தலைவராக சங்கர் வானவராயர் மற்றும் துணைத்தலைவராக ஶ்ரீவத்ஸ்ராம்
இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ (Confederation of Indian Industries) அமைப்பின் தமிழகப் பிரிவின் தலைவராகிறார் ஏ.பி.டி இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் திரு.சங்கர் வானவராயர். சி.ஐ.ஐ அமைப்பின் தமிழகப் பிரிவின் தலைவராக இருந்த டெய்ம்லர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை தலைமை அதிகாரியான சத்யாகம் ஆர்யாவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு துணைத் தலைவராக இருந்த சங்கர் வானவராயர், இப்போது தலைவர் ஆகியிருக்கிறார்.
சங்கர் வானவராயர், சி.ஐ.ஐ அமைப்பில் நீண்ட காலமாக பங்காற்றி வருகிறார். குமரகுரு கல்வி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் இவர், இளம் இந்தியர்கள் (Young Indians) அமைப்பின் தலைவராக 2011-12-ஆம் ஆண்டில் இருந்தார். கோவையில் பிசினஸ் புத்தாக்க மையமான ஃபோர்ஜ் ஆக்ஸிலேட்டர் என்பதை அமையக் காரணமாக இருந்தார் சங்கர் வானவராயர். அடுத்த ஓராண்டு காலத்துக்கு சி.ஐ.ஐ அமைப்பின் தமிழகப் பிரிவின் தலைவராக சங்கர் வானவராயர் இருப்பார்.
சி.ஐ.ஐ. அமைப்பின் தமிழகப் பிரிவின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் சென்னைய, வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநரான திரு. ஶ்ரீவத்ஸ் ராம்.
கடந்த பல ஆண்டுகளாகவே சி.ஐ.ஐ அமைப்புடன் இணைந்து செயலாற்றி வருபவர். டி.வி.எஸ் குடும்பத்தைச் சேர்ந்த இவர், சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட், சுந்தரம் ஃபைனான்ஸ் ஹோல்டிங் லிமிடெட் உள்பட பல்வேறு நிறுவனங்களில் முக்கியமான பொறுப்புகளை வகிப்பவர்.