எலெக்ட்ரிக் 3- வீலர்களுக்கு இந்தியாவில் உருவாகும் உலகின் மிக பிரமாண்ட ஆலை
World's Biggest Electric vehicle Manufacturing plant

உலகின் மிக பெரிய எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகன உற்பத்தி ஆலை இந்தியாவில் ஓமெகா சீக்கி மொபிலிட்டி அமைக்க திட்டமிட்டுள்ளது.
முன்னணி மின் வாகன உற்பத்தி நிறுவனமான ஓமெகா சீக்கி மொபிலிட்டி (Omega Seiki Mobility) உலகின் மிக பெரிய மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை இந்தியாவில் அமைக்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவது அனைவரும் ஒன்றே. இந்தியாவிலும் நாளுக்கு மின் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. தற்போது இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மிக அமோகமான விற்பனைக் கிடைத்து வருகின்றது.
இதற்கு அடுத்தபடியாக எலெக்ட்ரிக் கார்களுக்கும் மக்கள் மத்தியில் நல் ஆதரவு கிடைத்து வருகின்றது. இந்தமாதிரியான சூழலை மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சியில் ஒமெகா சீக்கி மொபிலிட்டி நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.
இதன் அடிப்படையில் நிறுவனம் ஓர் பிரமாண்ட மின் வாகன உற்பத்தி ஆலையை அமைக்க இருக்கின்றது. அது உலகளவில் மிக பெரியதாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அங்கு பிரத்யேகமாக மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே தயாரிக்கப்படும் எனவும் ஒமெகா சீக்கி மொபிலிட்டி அறிவித்துள்ளது.
உலக பூமி தினமான இன்றைய தினத்தில் இதுகுறித்த தகவலை நிறுவனம் வெளியிட்டிருப்பது சமூக நல ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்று சூழலுக்கு நண்பனாக செயல்படும். இதன் காரணத்தினால் உலகமே மின் வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே உலகின் மிக பெரிய மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை இந்தியாவில் கட்டமைப்பதாக ஒமெகா சீக்கி மொபிலிட்டி அறிவித்துள்ளது. இந்த ஆலை கர்நாடகா மாநிலத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் கட்டமைக்கப்பட இருக்கின்றது.
இந்த ஆலை ஆண்டிற்கு 1 மில்லியன் எலெக்ட்ரிக் 3 வீலர் உற்பத்தி எனும் திறனில் உருவாகிக் கொண்டுள்ளது. உண்மையில் மிக பிரமாண்டமான எண்ணிக்கை ஆகும். மூன்று அலகுகளாக ஆலை உருவாக்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், புதிய உற்பத்தி ஆலை அடுத்த நிதியாண்டிற்குள் தயாரிப்பிற்கு ரெடியாகிவிடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கு தயாரிக்கப்படும் மின்சார மூன்று சக்கர வாகனங்கள் உள் நாட்டு விற்பனைக்காக மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது. மெகா உற்பத்தியாலை அமைப்பைத் தொடர்ந்து தனது சப்ளை சங்கிலியை விரிவாக்கம் செய்யும் பணியிலும் ஒமெகா சீக்கி மொபிலிட்டி நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.
தென் கொரியாவைச் சேர்ந்த ஓர் பிரபல நிறுவனத்துடனான கூட்டணியின் வாயிலாகவே பிரமாண்ட தொழிற்சாலையை ஒமெகா சீக்கி மொபிலிட்டி உருவாக்கி வருகின்றது. இரு நிறுவனங்களும் ஆலையை உருவாக்கும் பணியில் மிக தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றன. ஆகையால், கூடிய விரைவில் இந்த ஆலையில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவின் டெலிவரி மற்றும் பயணிகள் போக்குவரத்தில் மூன்று சக்கர வாகனங்கள் பெரும் பங்கினை வகிக்கின்றன. இந்த பிரிவில் அதிகளவில் மின் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வருமானால் காற்று மாசுபாடு மிக பெரியளவில் குறையும். இத்துடன், குறைவான பராமரிப்பு செலவே மின் வாகனங்களில் ஏற்படும் என்பதால் அவற்றின் உரிமையாளர் மற்றும் பயனர்கள் என அனைவரும் நல்ல லாபத்தை பெற முடியும்.



